< Back
மாநில செய்திகள்
திண்டிவனம் முன்னாள் நகரமன்ற தலைவரிடம் ரூ.76 லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனம் முன்னாள் நகரமன்ற தலைவரிடம் ரூ.76 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
23 March 2023 7:08 PM GMT

பழைய இரும்புகளை உடைக்கும் தொழில் செய்வதாக கூறி திண்டிவனம் முன்னாள் நகரமன்ற தலைவரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60), முன்னாள் நகரமன்ற தலைவரான இவர் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவரிடம் கடந்த 2021-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் புக்கத்துறையை சேர்ந்த ராஜேஷ் (35), புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (47) ஆகியோர் அறிமுகமாகினர். அப்போது அவர்கள் இருவரும், வெங்கடேசனிடம் பழைய இரும்புகளை உடைக்கும் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியதோடு அதற்காக ரூ.65 லட்சம் கடனாக தரும்படியும், பணத்தை 5 நாட்களுக்குள் திருப்பித்தருவதாகவும் கூறினர். இதை நம்பிய வெங்கடேசன், கடந்த 25.9.2021 அன்று தனக்கு தெரிந்த திண்டிவனத்தை சேர்ந்த கே.ஆர்.எஸ். பில்டர்ஸ் உரிமையாளர் சுப்புராயலு என்பவரிடம் இருந்து கடனாக பெற்று கொடுத்துள்ளார். அந்த பணத்தை ராஜேஷ், விஜயகுமார் மற்றும் விஜயகுமாரின் உறவினரான புதுச்சேரி மனப்பட்டை சேர்ந்த பிரபு ஆகியோர் காரில் வந்து பெற்றுச்சென்றனர்.

ரூ.76 லட்சம் மோசடி

அதன் பிறகு சில நாட்கள் கழித்து வெங்கடேசனை அவர்கள் தொடர்புகொண்டு உடனடியாக ரூ.11 லட்சம் தேவைப்படுகிறது என்றும், இந்த தொகையை 10 நாட்களில் தந்து விடுவதாக அவர்கள் கூறினர். இதை நம்பிய வெங்கடேசன், தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து பணத்தை பெற்று அதனை 22.11.2021 அன்று ராஜேசுக்கு கொடுத்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் வெங்கடேசனுக்கு கடன் தொகை ரூ. 76 லட்சத்தை கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 5.3.2023 அன்று ராஜேஷ், விஜயகுமார் ஆகிய இருவரும் திண்டிவனம் சலவாதி பகுதிக்கு வருமாறு வெங்கடேசனை அழைத்தனர். அதன்படி அங்கு வந்த வெங்கடேசன், தனது பணத்தை திருப்பித்தருமாறு வற்புறுத்தி கேட்டார். அதற்கு ராஜேஷ், விஜயகுமார், பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு பணத்தை திருப்பிக்கேட்டால் கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

2 பேர் கைது

இதுகுறித்து வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜேஷ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பிரபுவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்