< Back
மாநில செய்திகள்
லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.22 கோடி வழங்கப்பட்டது
மதுரை
மாநில செய்திகள்

லோக் அதாலத் மூலம் பயனாளிகளுக்கு ரூ.22 கோடி வழங்கப்பட்டது

தினத்தந்தி
|
26 Jun 2022 9:20 PM GMT

மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் ரூ.22 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் ரூ.22 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

லோக் அதாலத்

மதுரை ஐகோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதில் இன்சூரன்ஸ் வழக்குகள், தனிநபர் வழக்குகள், போக்குவரத்துக்கழக வழக்குகள், ரிட் வழக்குகள், கிரிமினல் ரிவிஷன் வழக்குகள், அப்பீல் மனுக்கள் என மொத்தம் 343 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்கான பட்டியலிடப்பட்டன. இந்த வழக்குகளை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் சொக்கலிங்கம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் தலைமையில் 3 தனித்தனி குழுக்கள் விசாரித்தன.

முடிவில் 34 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 45 லட்சத்து 10 ஆயிரத்து 960 வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் மோகன்தாஸ், சிவா, பூபாலன், வக்கீல்கள் கிருஷ்ணவேணி, ஆர்.வெங்கடேசன், டி.எஸ்.முகமது முகைதீன் ஆகியோர் மேற்கண்ட வழக்குகளை விசாரிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

பயனாளிகளுக்கு இழப்பீடு

இதேபோல மதுரை மாவட்ட கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை தலைமையில் நேற்று லோக் அதாலத் நடந்தது. இதில் வங்கி மீட்பு நடவடிக்கை வழக்குகள், தொழிலாளர் விவகாரங்கள் குறித்த வழக்குகள், மின்சார வரி, குடிநீர் வரி, கிரிமினல், திருமண விவகாரங்கள் மற்றும் சிவில் வழக்குகள் என மொத்தம் 9,364 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்காக பட்டியலிடப்பட்டன. இந்த வழக்குகளை 24 நீதிபதிகள் தலைமையில் வக்கீல்கள், சமூக சேவகர்கள் அடங்கிய குழுவினர் விசாரித்தனர். முடிவில், 5,354 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.20 கோடியே 1 லட்சத்து 55 ஆயிரத்து 639 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு நான்குவழிச்சாலையில் நடந்த கார் விபத்தில் விருதுநகரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் விஜயன் இறந்தார். இந்த விபத்து வழக்கில் இழப்பீடு கேட்டு மதுரை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.70 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலையை நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை, தொழிலாளர் கோர்ட்டு நீதிபதி முத்துசாரதா முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான தீபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்