திருவண்ணாமலை
இணையதளம் மூலம் பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் நூதன மோசடி
|வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி நடந்துள்ளது
திருவண்ணாமலை,
வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி நடந்துள்ளது.
மோசடிகள்
சமீப காலமாக வேலையில்லாமல் வீட்டில் இருப்பவர்களை குறிவைத்து வீட்டில் இருந்த படியே இணையதளம் மூலம் சம்பாதிக்கலாம் என்று பல்வேறு போலி இணையதள முகவரி மூலம் மோசடிகள் நடக்கின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்த நிலையில் போலீசாரும் இதுபோன்று அறிவிப்புகளை நம்பி பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். எனினும் பலர் பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதில் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்றும் விருப்பமா? என்றும் கேட்கப்பட்டிருந்தது.
ரூ.1¼ லட்சம்
அந்த முகவரியில் உள்ள இணைப்பை அவர் கிளிக் செய்து உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போது அதில் குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால் கொடுக்கும் பணியை (டாஸ்க்) செய்து முடித்தபின் அந்த பணம் கூடுதல் செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்து உள்ளது. இவரும் ஆர்வமாக பணம் செலுத்தி பணிகள் மேற்கொள்ள கூடுதலாக பணமும் வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என பணம் செலுத்தி குறிப்பிட்ட பணிகளை செய்து உள்ளார். தொடர்ந்து அவர் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பணிகள் முடித்தபின் எந்தவித பணமும் திரும்ப வரவில்லை. மேலும் அவரால் யாரையும் தொடர்பும் கொள்ளவும் முடியவில்லை.
புகார்
அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டு உள்ளது தெரியவந்தது. இது குறித்து அந்த பெண் திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.