< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் பெண்ணிடம் ரூ.1½ கோடி மோசடி:திருப்பூரில் கைதானவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் பெண்ணிடம் ரூ.1½ கோடி மோசடி:திருப்பூரில் கைதானவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

தினத்தந்தி
|
8 Aug 2023 9:46 PM GMT

ஈரோட்டில் பெண்ணிடம் ரூ.1½ கோடி மோசடி: திருப்பூரில் கைதானவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடைபெற்றது

ஈரோட்டில் பெண்ணிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில் திருப்பூரில் கைதானவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படுகிறது.

ரூ.1½ கோடி மோசடி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ரங்கநாயகி. இவர்களிடம் திருப்பூர் மாவட்டம் வேலப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 43), அவருடைய தம்பி விஜயகுமார் (41) ஆகியோர் அறிமுகமாகினர். அப்போது அவர்களிடம் சிவக்குமாரும், விஜயகுமாரும் புதிதாக தொழில் தொடங்க இருப்பதாகவும், அதற்கு முதலீடு செய்தால் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். தொழில் செய்வதற்கு தேவையான பணத்தை பெறுவதற்கு வீடு, நிலத்தை அடமானம் வைக்குமாறும் தெரிவித்தனர்.

அவர்களை நம்பிய ரங்கநாயகி தனது வீடு, நிலத்தின் பத்திரங்களை கடந்த 2018-ம் ஆண்டு சிவக்குமார், விஜயகுமாா், அவருடைய மகன் ராகுல் பாலாஜி (19), உதவியாளர் பிரவீனா (36), சிவக்குமாரின் உறவினரான தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் (30) ஆகியோரிடம் கொடுத்து உள்ளார். இந்த பத்திரங்களை அவர்கள் வங்கியில் அடமானம் வைத்து ரூ.1½ கோடியை பெற்றனர். அதன்பிறகு அவர்கள் தலைமறைவாகினர்.

கைது

இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரங்கநாயகி புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் சிவக்குமார் உள்பட 5 பேரும் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த மோசடி வழக்குகளில் ஈடுபட்ட சிவக்குமார், பிரவீனா ஆகியோரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த உதயக்குமாரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயக்குமார், அவருடைய மகன் ராகுல் பாலாஜி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீஸ் காவல்

இந்தநிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிவக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதையொட்டி 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கேட்டு ஈரோடு கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். ஆனால் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து நேற்று போலீசார், சிவக்குமாரை சிறையில் இருந்து அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் மோசடி செய்த பணத்தை என்ன செய்தனர்? மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? தலைமறைவாக உள்ள விஜயகுமார், ராகுல் பாலாஜியின் விவரம் போன்றன தெரியவரும்.

Related Tags :
மேலும் செய்திகள்