< Back
மாநில செய்திகள்
பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
21 Aug 2023 10:02 AM GMT

பொன்னேரி அடுத்த பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் குவிந்து கிடக்கும் மீன் கழிவுகள் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன் மார்க்கெட்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியின் கரையில் 5 ஏக்கர் பரப்பளவில் பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதி அடங்கியுள்ளது. இங்கு பழவேற்காடு பகுதியில் அடங்கியுள்ள லைட்ஹவுஸ்குப்பம், கோட்டைக்குப்பம், பழவேற்காடு, தாங்கல்பெரும்புலம் ஊராட்சியில் அடங்கியுள்ள 30-க்கும் மேற்பட்ட மீன் கிராமத்தினர் பிடிக்கப்படும் மீன் வகைகளை கொண்டு இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த மார்க்கெட்டில் மீன் விற்பனை கூடம், மீன் இறக்கு தளம், மீன் ஏல கூடம், மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கும் டீசல் பங்க், மீன் உலர் கலம், மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகம், கடலோர காவல் படை போலீஸ் நிலையம் மற்றும் 27 கடைகள் மற்றும் இதன் அருகாமையில் பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரி போன்றவை செயல்பட்டு வருகிறது.

தொற்றுநோய் பரவும் அபாயம்

இந்த நிலையில் நாள்தோறும் இந்த மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கொண்டு வரும் மீன்களை உள்நாடு, வெளிநாடு ஏற்றுமதியுடன் வெளி மாவட்டங்களுக்கும் உள்ளூர் மீன் பிரியர்கள் விலைக்கு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான படகுகளில் மீன் பிடித்து வரும் மீன் விற்பனை செய்ய நிலையில் வலைகள் மற்றும் மீன் விற்பனைக்கு பின் உள்ள மீன் கழிவு குவியல் குவியலாக இந்த மீன் மார்க்கெட் பகுதியில் கொட்டப்படுகிறது.

இதனால் ஆங்காங்கே குவியும் மீன்கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த மீன் மார்க்கெட் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன் பிரியர்கள் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்