< Back
மாநில செய்திகள்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தார் பிறழ் சாட்சியம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தார் பிறழ் சாட்சியம்

தினத்தந்தி
|
4 Sep 2023 6:45 PM GMT

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தார் பிறழ் சாட்சியம் அளித்துள்ளாா்.

வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் நேற்று முன்னாள் வானூர் தாசில்தாரும் தற்போது அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவருமான மாணிக்கம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர், இவ்வழக்கு சம்பந்தமான கோப்புகளில் என்னிடம் அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், எனக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்று அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். பின்னர் அவரிடம் அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணை மீண்டும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் 7 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இவ்வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்