
தேனி
பீடத்தில் இருந்து அகற்றப்பட்டு புதரில் வீசப்பட்ட சாமி சிலை: தேனியில் பரபரப்பு

தேனியில் பீடத்தில் இருந்து அகற்றப்பட்டு புதரில் சாமி சிலை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி அரண்மனைப்புதூர் விலக்கில் மதுரை சாலையோரம் காளியம்மன் கோவில் உள்ளது. மரத்தடி நிழலில் அமைந்துள்ள இந்த கோவிலில் சுமார் ஒரு அடி உயர காளியம்மன் கற்சிலை அமைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த கோவிலில் பூஜை செய்யும் துளசியம்மாள் என்பவர் நேற்று காலை பூஜை செய்ய வந்தார். அப்போது கோவில் பீடத்தில் இருந்த சாமி சிலை மாயமாகி இருந்தது.
தகவல் அறிந்ததும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் அப்பகுதியை பார்வையிட்ட போது, அதே பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் சிமெண்டு சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் சாமி சிலை கிடந்தது. தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். சாமி சிலையை தூக்கிச் செல்ல முயன்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோவில் பூசாரி துளசியம்மாள் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.