< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

தினத்தந்தி
|
3 Sep 2022 8:53 AM GMT

ஊத்துக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராபின் (வயது 24). இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

ராபினின் நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அருகே உள்ள போநந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 31-ந்தேதி இரவு நடைபெற்றது. ராபின் தன்னுடைய நண்பர் கமல் என்பவருடன் விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் ராபின் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த பெட்ரோல் நிலைய பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடித்து வாலிபர் ராபினின் உடலை போலீசார் உறவினர்களுக்கு ஒப்படைக்க முயற்சித்தனர்.

ஆனால் கொலையாளிகளை கைது செய்யும் வரை ராபினின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் ராபினின் உடல் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்