< Back
மாநில செய்திகள்
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை - ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 63 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மாநில செய்திகள்

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை - ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 63 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தினத்தந்தி
|
22 July 2022 12:20 PM GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 63ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்பொழுது மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

மீண்டும் மழை

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனிடையே காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இன்று காலை 6 மணி நிலவரப்படி 45ஆயிரம் கன அடியாக அதிகரிக்க தொடங்கியது.

இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மதியம் 2 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீரை காவிரி நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

ஒகேனக்களுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படுவதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் கரைகளை தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்களை ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்

மேலும் செய்திகள்