ஈரோடு
சத்தி அருகே மழையால் 3 வீடுகள் இடிந்து சேதம்
|சத்தி அருகே மழையால் 3 வீடுகள் இடிந்து சேதம்
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கொமாரபாளையம் ஏ.டி.காலனியில் வசித்து வரும் அல்போன்ஸ் மேரி என்பவரின் வீட்டின் மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்தது. அப்போது அல்போன்ஸ் பக்கத்தில் உள்ள அறையில் தூங்கியதால் அவர் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார். மேலும் செங்கோட்டை நகரில் சித்தப்பன் என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்தபோது இவர் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார்.
இதுதவிர தாசிரிபாளையம் கிழக்கு காலனியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவரும் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேற்கூரை சரிந்து விழுந்துவிட்டது. சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள அறையில் தூங்கிய இவர் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். இதனால் அவர் உயிர் தப்பினார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொமாரபாளையம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அப்போது ஒன்றிய குழு உறுப்பினர் சத்திய பழனிசாமி, துணைத்தலைவர் ரமேஷ், வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராசு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் கொமராபாளையம் கிராம நிர்வாக அலுவலரும் அங்கு வந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனார். பின்னர் அவர் இதுபற்றி சத்தியமங்கலம் தாசில்தாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.