< Back
மாநில செய்திகள்
தாளவாடி அருகே பரபரப்பு; காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்  -ஒரு மணி நேரம் பரிதவித்த பயணிகள்
ஈரோடு
மாநில செய்திகள்

தாளவாடி அருகே பரபரப்பு; காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் -ஒரு மணி நேரம் பரிதவித்த பயணிகள்

தினத்தந்தி
|
6 Sep 2022 9:12 PM GMT

தாளவாடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அரசு பஸ் சிக்கிக்கொண்டது. இதனால் ஒரு மணி நேரம் பயணிகள் பரிதவித்தார்கள்.

தாளவாடி

தாளவாடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அரசு பஸ் சிக்கிக்கொண்டது. இதனால் ஒரு மணி நேரம் பயணிகள் பரிதவித்தார்கள்.

காட்டாற்று வெள்ளம்

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தார்கள். தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம் வனச்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கிருந்த தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடியது.

பஸ் கடந்து செல்லும் அளவுக்கு தண்ணீர் சென்றதால் டிரைவர் காட்டாற்றை கடக்க முயன்றார்.

பயணிகள் அலறல்

தரைப்பாலத்தின் நடுப்பகுதியில் பஸ் சென்றபோது திடீரென காட்டாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை வேகமாக கடந்து செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் பஸ்சின் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் நின்றுவிட்டது. மேலும் டயர்கள் முழுவதும் மூழ்கி அதிக வேகத்தில் காட்டாற்று வெள்ளம் சென்றதால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள்.

கண்டக்டர் பயணிகளை சமாதானப்படுத்தினார். என்றாலும் பயணிகள் பெரும் அச்சத்துக்கு ஆளானார்கள். டிரைவர் எவ்வளவு போராடியும் பஸ்சை இயக்க முடியவில்லை.

நிம்மதி பெருமூச்சு

இதற்கிடையே பஸ்சுக்குள் இருந்து பயணிகள் கீழே இறங்கினால் தண்ணீர் இழுத்து சென்றுவிடும் என்று யாரும் கீழே இறங்கவில்லை. செல்போனில் அவரவர் உறவினர்களுக்கு கவலையுடன் தகவலை பகிர்ந்துகொண்டார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் இதே நிலை நீடித்தது. பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். அதன்பின்னர் வெள்ளம் ஓரளவு குறைந்தது. டயர்கள் வெளியே தெரிந்தன. இதனால் டிரைவர் பஸ்சை இயக்கி மெல்ல மெல்ல காட்டாற்றை கடந்தார். அதன்பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த காட்சிகளை பயணிகளே தங்கள் செல்போனில் படமும் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.

காட்டாற்று வெள்ளத்தில் பயணிகளுடன் அரசு பஸ் சிக்கிக்கொண்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்