< Back
மாநில செய்திகள்
தேனியில் ரூ.70 கோடியில் ரெயில்வே மேம்பாலம்
தேனி
மாநில செய்திகள்

தேனியில் ரூ.70 கோடியில் ரெயில்வே மேம்பாலம்

தினத்தந்தி
|
3 Aug 2022 5:37 PM GMT

தேனியில் ரூ.70 கோடி செலவில் மாவட்டத்தின் முதல் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

தேனியில் ரூ.70 கோடி செலவில் மாவட்டத்தின் முதல் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

ரெயில்வே மேம்பாலம்

மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 9.35 மணி அளவில் தேனிக்கு வரும் இந்த ரெயில், மாலை 6.15 மணி அளவில் தேனியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறது. ரெயில் வந்து செல்லும் நேரங்களில் பெரியகுளம் சாலை, மதுரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த இரு சாலைகளிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்த மதிப்பீடு ஒப்புதல் பெறப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கின. இதற்காக மதுரை சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. பாலம் அமைக்கும் பணி நடப்பதால் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இதுதொடர்பாக தேனி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தேனி-மதுரை சாலையில் பங்களாமேடு திட்டச்சாலை சந்திப்பு அருகில் தொடங்கி, மேரி மாதா மெட்ரிக் பள்ளி அருகில் வரை சுமார் 1.2 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 15 மீட்டர் அகலத்தில் இந்த பாலம் அமைகிறது.

ரெயில் பாதைக்கு அடியில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளில் இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்து வழித்தடத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை சாலை வழியாக தேனிக்கு வரும் வாகனங்கள், மேரி மாதா பள்ளி அருகில் சாலையின் மையத்தடுப்பு சுவரில் இருந்து வலது புறமாக வர வேண்டும். தேனியில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்களும் அதே பாதையில் செல்ல வேண்டும். மையத்தடுப்பு சுவரின் மற்றொரு பகுதியில் பாலம் வேலை நடக்க உள்ளது" என்றார்.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆற்று பாலம் மற்றும் சிறிய பாலங்கள் உள்ளன. ஆனால் மேம்பாலம் எங்கும் இல்லை. இதன்மூலம் மாவட்டத்தில் அமைய உள்ள முதல் மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
மேலும் செய்திகள்