< Back
மாநில செய்திகள்
அம்மிக்கல்லை தலையில் போட்டு  தொழிலாளி படுகொலை
தேனி
மாநில செய்திகள்

அம்மிக்கல்லை தலையில் போட்டு தொழிலாளி படுகொலை

தினத்தந்தி
|
19 May 2022 5:45 PM GMT

ஆண்டிப்பட்டி அருகே, அம்மிக்கல்லை தலையில் போட்டு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

அண்ணன்-தம்பி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீத்தாராம்தாஸ் நகரை சேர்ந்தவர் அன்பழகன். அவருடைய மகன் வசந்தகுமார் (வயது 18). பால் கறக்கும் தொழிலாளி. இவருக்கு, 16 வயதான தம்பி உள்ளார். இவர், மினரல் வாட்டர் ஏற்றி செல்லும் வேனில் தொழிலாளியாக பணிபுரிந்தார். இவர்களின் தாய் சிறுவயதிலேயே இறந்து விட்டார். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்பழகனும் வீட்டை விட்டு சென்று விட்டார். அவர், எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இதனையடுத்து வசந்தகுமாரும், 16 வயது சிறுவனும் அன்பழகனின் தாய் பழனியம்மாளின் பராமரிப்பில் அவரது வீட்டில் வசித்து வந்தனர். வசந்தகுமார், செலவுக்கு பணம் கேட்டு தனது பாட்டியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

பணம் கேட்டு தகராறு

இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு வசந்தகுமார் வீட்டுக்கு வந்தார். அப்போது பாட்டி மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் பணம் கேட்டு வசந்தகுமார் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

பாட்டி தன்னிடம் பணம் இல்லை என்று கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அந்த நேரத்தில், வேலை முடிந்து அவருடைய தம்பி வீட்டுக்கு வந்தார். அவரிடம், வசந்தகுமார் பணம் கேட்டு தகராறு செய்தார். அதன்பிறகு வசந்தகுமார் படுத்து உறங்கினார். அவருடைய தம்பியும் உறங்க சென்று விட்டார்.

அம்மிக்கல்லை போட்டு கொலை

இந்தநிலையில் தன்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் அண்ணனை கொலை செய்ய தம்பி முடிவு செய்தார். அதன்படி நள்ளிரவில் எழுந்த அவர், அம்மிக்கல்லை எடுத்து தனது அண்ணனின் தலையில் போட்டார்.

இதில் வசந்தகுமார், சம்பவ இடத்திேலயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். எனினும் ஆத்திரம் தீராத அவர், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வசந்தகுமாரின் கை மற்றும் கால்களில் வெட்டினார். பின்னர் அங்கு இருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் வசந்தகுமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது-வாக்குமூலம்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த அவருடைய தம்பியை கைது செய்தனர். அவர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், எனது பாட்டியிடம் வசந்தகுமார் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று அவர், பணம் கேட்டு தகராறு செய்ததால் பாட்டி கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தேன் என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்