< Back
மாநில செய்திகள்
ஆரணி ஆற்றில் உள்ள புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது; 25 கிராமங்கள் துண்டிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆரணி ஆற்றில் உள்ள புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது; 25 கிராமங்கள் துண்டிப்பு

தினத்தந்தி
|
15 Nov 2022 2:21 PM GMT

ஆரணி ஆற்றில் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் 25 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஆரணி ஆற்றில் வெள்ளம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே ஆரணி ஆற்றில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதேபோல், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்களம் ஊராட்சியில் மங்களம்-ஆரணி இடையே ஆரணி ஆற்றில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட மண்சாலை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்ததால் ஆரணி ஆற்றில் பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது. இதனால் இந்த அணைக்கட்டில் இருந்து உபரி நீர் தண்ணீர் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், சுண்ணாம்பு கால்வாய், விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர் ஆகியவை அதிக அளவு ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

போக்குவரத்தை தடை

இதனால் புதுப்பாளையம், மங்களம் ஆகிய கிராமங்களில் உள்ள தரைப்பாலம் மற்றும் மண் சாலை மீது பல அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்களும், தனியார் மற்றும் அரசு துறை பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆபத்தை உணராமல் இப்பகுதியில் பொதுமக்கள் குளிப்பதும், செல்பி எடுப்பதுமாக இருந்தனர். இதனால் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில், ஆரணி மற்றும் பெரியபாளையம் போலீசார் இப்பகுதியில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.

கிராமங்கள் துண்டிப்பு

இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து தங்களது பயணத்தை துவக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். எனவே, தமிழக அரசு அறிவித்தபடி, ரூ.20 கோடி செலவில் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உயர் மட்ட மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் முடித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்