< Back
மாநில செய்திகள்
சாலை வசதி கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சேலம்
மாநில செய்திகள்

சாலை வசதி கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தினத்தந்தி
|
8 Nov 2022 8:11 PM GMT

சங்ககிரியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்ககிரி

சாலை வசதி

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்ட வரதம்பட்டி ஊராட்சி ஆவரங்கம்பாளையம் பாறைவளவு அருந்ததியர் தெருவில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதிக்கு செல்லும் வண்டிப்பாதையை சிலர் அடைத்து விட்டனர்.

இதனால் பாதை வசதி இல்லாததால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும் அவசரமாக மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்ய வேண்டும் என்று கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் சாலை வசதி கோரி நேற்று காலை 11 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, உதவிகலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜ், தலைமையிடத்து துணைதாசில்தார் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜூ, கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமார் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாக சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியா உறுதி அளித்தார். அந்த கோரிக்கையை ஏற்ற பொதுமக்கள் மாலை 3 மணியளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்