< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2-வது நாளாக சாலை மறியல்..!
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2-வது நாளாக சாலை மறியல்..!

தினத்தந்தி
|
13 April 2023 6:28 AM GMT

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். அப்போது 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டுவேந்து, மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள். அங்கிருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினார்கள். பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் படகுகளை வைத்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் செய்திகள்