< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார வாகனம்
தர்மபுரி
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார வாகனம்

தினத்தந்தி
|
19 April 2023 6:45 PM GMT

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்கள் சேர்க்கையை அரசு பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தர்மபுரி நகராட்சி சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வுபிரசார வாகன தொடக்க விழா நடைபெற்றது. பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி, உதவி திட்ட அலுவலர்கள் ரவிக்குமார் சம்பத்குமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயபிரகாசம் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

விழிப்புணர்வு ஊர்வலம்

தர்மபுரி மாவட்டத்தில் இந்த பிரசார வாகனத்தில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், கல்விசார் இணை செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள் உள்ளன. மேலும், அரசு பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஆங்கில வழி பிரிவுகள், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்தும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை மற்றும் இல்லம் தேடிக் கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரசார வாகனத்தில் மாணவர் சேர்க்கை சார்ந்த விழிப்புணர்வு பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த பிரசார வாகனம் வருகிற 28-4-2023 வரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்