
வேலூர்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

நுகர்வோர் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
வேலூர்
வேலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர்கள் விஜயன் (திருப்பத்தூர்), கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை), வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் வரவேற்றார்.
விழாவிற்கு, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி வேலூர் மண்டல அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடைபெற்ற கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசினார்.
அதைத்தொடர்ந்து உலக நுகர்வோர் உரிமைகள் தினம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை, சட்டமுறை எடையளவு துறை, மருந்து கட்டுப்பாட்டுத்துறை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு, நுகர்வோர் பாதுகாப்புகுழு உறுப்பினர்கள் பேசினார்கள்.
விழாவில், வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.