< Back
மாநில செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தடைந்தார்
மாநில செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தடைந்தார்

தினத்தந்தி
|
18 March 2023 4:50 AM GMT

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2-வது முறையாக திரவுபதி முர்மு தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

கன்னியாகுமரி,

கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒரு நாள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு அவர் வந்து சேர்ந்தார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2-வது முறையாக திரவுபதி முர்மு தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்

கன்னியாகுமரியில் இன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்று பார்வையிட உள்ளார். மேலும் அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார்.

பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர இன்றி சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்