< Back
மாநில செய்திகள்
11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை
திருப்பூர்
மாநில செய்திகள்

11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை

தினத்தந்தி
|
17 July 2023 5:21 PM GMT

திருப்பூர் மாவட்டத்தில் 11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 11 கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

பறக்கும் படைகள்

வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்துக்கு புறம்பாக ஜவுளி ரகங்கள் மலிவு விலையில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை மேற்கொள்வதாக தெரிகிறது. இதன் காரணமாக கைத்தறி நெசவாளர்கள் தங்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் தற்போது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 அமல்படுத்தி வரும் கைத்தறி துறையால் தற்போது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படைகள் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளன. ஆய்வு நேரத்தின்போது சட்டத்துக்கு புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுவது அல்லது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது போலீசில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும்.

வேலைவாய்ப்பு

தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களையும் வகையில் தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலைவாய்ப்பையும், அதற்கான ஊதியமும் பெற்று பயன்பெறலாம்.

சங்க உறுப்பினருக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதிய திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், இலவச வீடுகட்டும் திட்டம், இலவச மின்சார திட்டம், பிரதான் மந்திரி சர்வசிஷா போஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, மகாத்மாகாந்தி புங்கர் பீமா யோஜனா ஆகிய நலத்திட்டங்கள் பெற்று வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

11 ரகங்கள்

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடை துணி கம்பளி சால்வை, உல்லன் ட்வீட் சத்தார்க் ஆகிய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது.

மேற்கண்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற திருப்பூர் கலெக்டர் அலுவலகம், 6-வது தளத்தில் அறை எண்.601-ல் உள்ள உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தையோ, 0421 2971195 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்