< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி
திருப்பூர்
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி

தினத்தந்தி
|
20 July 2023 4:55 PM GMT

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று திருப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று திருப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வைகட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர்குமரன் சிலை முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். காய்கறிகளால் ஆன மாலையை அவர் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகத்தில் சின்னவெங்காயம், தக்காளி, பருப்பு வகைகள் விலை உயர்ந்து ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை உயர்வு, அதற்கு அடுத்து மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வால் வீட்டு வாடகை உயர்வு என மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு துரோகம் விளைவித்து சென்றவர்கள் சிறைக்கு செல்கிறார்கள். அமலாக்கத்துறை சோதனையில் தி.மு.க. அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிக்கி வருகிறார்கள். இப்படியே சென்றால் அடுத்த அமைச்சரவை கூட்டம் திகார் ஜெயிலில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலையில் தி.மு.க. போய்க்கொண்டிருக்கிறது.

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அடையாளம் காணப்படும் மோடி பிரதமராக வருவார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டில் 1 கோடி பேர் பங்கேற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் சிவசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், கரைப்புதூர் நடராஜன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், தங்கராஜ், சாந்தி பாலசுப்பிரமணியம், சகுந்தலா ஈஸ்வரன், கவிதா விஜயகுமார், தனலட்சுமி ராமசாமி, திவ்யபாரதி பாலாஜி, பகுதி செயலாளர்கள் அரிகரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிட்டிபழனிசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், வக்கீல் அணி செயலாளர் முருகேசன், இணை செயலாளர் பா.சு.மணிவண்ணன், அம்மா பேரவை துணை செயலாளர் ஆண்டவர்பழனிசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால், 15 வேலம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் வி.கே.பி.மணி, ஆண்டிப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்தன் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து நகர, பேரூராட்சி கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி, வார்டு, ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்