< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவி மர்ம சாவு
மாநில செய்திகள்

பிளஸ்-2 மாணவி மர்ம சாவு

தினத்தந்தி
|
20 Nov 2022 11:05 PM GMT

பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற பிளஸ்-2 மாணவி ஏரியில் பிணமாக மிதந்தார். அவர் எப்படி இறந்தார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மோடிகுப்பம் அருகே உள்ள கீழ்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களின் மகள் பார்கவி (வயது 17). இவர் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

இதனிடையே நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியரிடம் கேட்டனர்.

ஏரியில் பிணமாக மிதந்தார்

அப்போது மாணவி பார்கவி பள்ளிக்கு வரவில்லை என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஐகுந்தம் பெரிய ஏரி பகுதியில் நேற்று பிற்பகல் சீருடை அணிந்த நிலையில் ஒரு மாணவி பிணம் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பெற்றோர் கதறல்

அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் இருந்து மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், காணாமல் போன மாணவி பார்கவி என்பதும், பள்ளி சீருடையில் புத்தக பையுடன் மாணவியின் உடல் ஏரியில் பிணமாக மிதந்ததும் தெரியவந்தது.. இது குறித்து போலீசார் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் பதறி அடித்தபடி ஏரிக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டாரா?

பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி பள்ளி செல்லாத நிலையில் எப்படி ஏரியில் பிணமாக மிதந்தார். ஏரி பக்கமாக நடந்து சென்ற போது மாணவி தவறி விழுந்தாரா? அல்லது தண்ணீரில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங் களில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்