< Back
மாநில செய்திகள்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது
மாநில செய்திகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

தினத்தந்தி
|
13 May 2024 1:56 PM GMT

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.

இந்த நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

பிளஸ்-1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

அதேபோல், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்