வேலூர்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|கே.வி.குப்பம் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மஞ்சப்பையின் பயன்பாடு, பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடைபெற்றது. வேப்பங்கனேரி ஊராட்சியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டது. காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை, பஸ் நிலையம், போலீஸ் நிலையம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்து அடைந்தனர்.
இதேபோல வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ்சாலை, கே.வி.குப்பத்தில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வந்து அடைந்தது.
ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பைகளின் தீமைகளையும், மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சிகளுக்கு திட்ட இயக்குனர் ஆர்த்தி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் செந்தில்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, இ.கோபி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.பெருமாள், பா.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன், புஷ்பலதா சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சரளா கலைவாணன், விஜயாமுருகன், உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.