< Back
மாநில செய்திகள்
பேருந்து சக்கரத்தில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியை சாவு
திருச்சி
மாநில செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியை சாவு

தினத்தந்தி
|
2 Jun 2023 8:23 PM GMT

பேருந்து சக்கரத்தில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியை உயிரிழந்தார்.

திருச்சி வடக்கு துவாக்குடி மலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரோஸ்நிர்மலா (வயது 53). இவர் திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தனது தாயாரின் நினைவு நாளுக்காக பூமாலை வாங்க ரோஸ்நிர்மலா திருச்சியில் உள்ள காந்திமார்க்கெட்டுக்கு கடந்த 18-ந்தேதி மதியம் தனியார் பஸ்சில் வந்தார். வெங்காயமண்டி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்குவதற்காக முன்புற படிக்கட்டு அருகே அவர் நின்று கொண்டிருந்தார்.அப்போது, பஸ்சை டிரைவர் வேகமாக சப்-ஜெயில் ரோட்டில் இருந்து மரக்கடை சாலைக்கு திருப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது, பஸ்சுக்குள் நின்று கொண்டிருந்த ரோஸ்நிர்மலா பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதற்குள் பஸ் திரும்பவே, பஸ்சின் பின் சக்கரம் ரோஸ்நிர்மலாவின் கால்களில் ஏறி இறங்கியது. இதில் அவருடைய இரு கால்களும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் ரோஸ் நிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள்ரெனி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்