< Back
மாநில செய்திகள்
குமரியில் கனமழை:பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு திற்பரப்பு அருவியில் குளிக்க கட்டுப்பாடு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் கனமழை:பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு திற்பரப்பு அருவியில் குளிக்க கட்டுப்பாடு

தினத்தந்தி
|
1 Oct 2023 6:44 PM GMT

குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

குளு குளு சீசன்

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 69 சதவீதம் குறைவாக பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இருந்து மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. தற்போது கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்று குளு குளு சீசன் நிலவுகிறது.

515 குளங்கள் நிரம்பின

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் சாரல் மழை பெய்தது. இதுபோல் மார்த்தாண்டம், குழித்துறை, தக்கலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையாகவும், கன மழையாகவும் பெய்தது.

திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவியில் அதிகமான தண்ணீர் கொட்டியதால் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது தண்ணீர் குறைவாக விழுந்த ஒரு பகுதியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்களில் 515 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. 750-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. மற்ற குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு 1,109 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 2,409 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 330 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 25 அடியை நெருங்கியது.

இதேபோல் பெருஞ்சாணி அணைக்கு நேற்று வினாடிக்கு 1,820 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி அதிகரித்து 47.50 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து பெய்த மழையால் செங்கல்சூளை தொழில் பாதிக்கப்பட்டது.

மழையளவு

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக களியலில் 70.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி- 32.6, சிற்றார் 1- 40.4, சிற்றார் 2- 26.8, கன்னிமார்- 42.2,கொட்டாரம்- 28.4, குழித்துறை- 44.8, மயிலாடி- 36.2, நாகர்கோவில்- 24.2, பேச்சிப்பாறை- 67.2, பெருஞ்சாணி- 50.8, புத்தன்அணை- 48.6, சுருளோடு- 48.2, தக்கலை- 37.2, குளச்சல்- 34.6, இரணியல்- 33, பாலமோர்- 68.4, மாம்பழத்துறையாறு- 35, திற்பரப்பு- 47.6, ஆரல்வாய்மொழி- 24.2, கோழிப்போர்விளை- 52.2, அடையாமடை- 61.3, மாம்பழத்துறையாறு- 35, பாலமோர்- 68.4, குருந்தன்கோடு- 14.6, ஆனைகிடங்கு- 32.4, முள்ளங்கினாவிளை- 41.2, முக்கடல் அணை- 39.3 என பதிவானது.

மேலும் செய்திகள்