< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்: 12 ஆண்டுகளுக்கு பிறகு எசனை பெரிய ஏரியில் மீன் பிடி திருவிழா
மாநில செய்திகள்

பெரம்பலூர்: 12 ஆண்டுகளுக்கு பிறகு எசனை பெரிய ஏரியில் மீன் பிடி திருவிழா

தினத்தந்தி
|
17 July 2022 3:12 PM GMT

பெரம்பலூர் அருகே எசனை பெரிய ஏரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 17 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் நிரம்பாமல் இருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நல்ல மழை பெய்த காரணமாக எசனை பெரிய ஏரி நிரம்பி வழிந்து கடைமடை வரை தண்ணீர் சென்றது.

பின்னர் விவசாயிகள் இந்த ஏரி தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வந்தனர். மேலும் இந்த ஏரியில் பொதுமக்கள் சார்பில், மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டு, தண்ணீ்ர் குறைந்தவுடன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி ஏரியில் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஏரியில் கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் எசனை பெரிய ஏரியில் மீன் பிடி திருவிழா நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று எசனை பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது.இன்று காலை சுமார் 8.30 மணியளவில் மீன்பிடி திருவிழா தொடங்கியது.

இதில் எசனை, பெரம்பலூர், வேப்பந்தட்டை, கோனேரிபாளையம், அன்னமங்கலம், ஆலம்பாடி, சோமண்டாபுதூர், வடக்கு மாதவி, ஏரிக்கரை, செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், திருப்பெயர், பாலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மீன் பிடி வீரர்கள் ஆர்வத்துடன் இறங்கி மீன் பிடி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர்.

சிலருக்கு மட்டுமே அதிகளவு மீன்கள் கிடைத்தது. பெரும்பாலனோருக்கு குறைந்த அளவே மீன்களை கிடைத்தன. அதிலும் கெண்டை, கெழுத்தி, தேளி உள்ளிட்ட வகையான மீன்கள் மட்டுமே கிடைத்தன. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், நிறைய பேர் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்