< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்களின் நிலையை அறிய2-வது நாளாக தாலுகா அலுவலகத்தில் குவிந்த மக்கள்
கடலூர்
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்களின் நிலையை அறிய2-வது நாளாக தாலுகா அலுவலகத்தில் குவிந்த மக்கள்

தினத்தந்தி
|
20 Sep 2023 6:45 PM GMT

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 கிடைக்காத பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களின் நிலையை அறிய 2-வது நாளாக தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு 6 லட்சத்து 8 ஆயிரத்து 862 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த 15-ந் தேதி வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல் விண்ணப்பங்களின் நிலை குறித்த எந்தவொரு குறுஞ்செய்தியும் பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் எனவும், இதற்காக கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என கலெக்டர் அறிவித்திருந்தார்.

நிராகரிப்பு

அதன்படி கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய சப்-கலெக்டர் அலுவலகங்களிலும், மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று முன்தினம் இணையசேவை பாதிப்பால், விண்ணப்பங்களின் நிலை குறித்து விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று கடலூர் தாலுகாவுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் விண்ணப்பங்கள் எதனால் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த உதவி மையம் மூலமாக அறிந்து கொண்டனர்.

இதில் பெரும்பாலான மக்களின் விண்ணப்பங்கள் தரவு பெறப்படவில்லை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்களை மீண்டும் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும்படி உதவி மைய ஊழியர்கள் அறிவுறுத்தினர்.

இருப்பினும் பெரும்பாலான மக்கள், மாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை கிடைத்துள்ளது. ஆனால் குடிசையில் வாழும் எங்களுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது என புலம்பியபடியே சென்றதை காணமுடிந்தது.

மேலும் செய்திகள்