< Back
மாநில செய்திகள்
மின்சாரம்-குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுகோள்
அரியலூர்
மாநில செய்திகள்

மின்சாரம்-குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுகோள்

தினத்தந்தி
|
3 April 2023 7:30 PM GMT

மின்சாரம்-குடிநீர் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பாண்டியன் ஏரியில் உள்ள கரையில் சிலர் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் நீர்நிலை பகுதியில் குடியிருப்பதாக கூறி, அவர்களை அப்புறப்படுத்தினர். இதில் வீடு, மனைகள் இல்லாதவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 14 குடும்பத்தினரும், இந்த கிராமத்தில் குடியேறினர்.

ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், அடிப்படை வசதிகளான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே உடனடியாக அப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும், மின் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்