< Back
மாநில செய்திகள்
நிலைமையை உணராத பணிகளால் மக்கள் அவதி: ஊழல்-லஞ்சத்துக்கு மழைநீர் வடிகால்வாய் பணியே சாட்சி
சென்னை
மாநில செய்திகள்

நிலைமையை உணராத பணிகளால் மக்கள் அவதி: ஊழல்-லஞ்சத்துக்கு மழைநீர் வடிகால்வாய் பணியே சாட்சி

தினத்தந்தி
|
18 Sep 2022 8:03 AM GMT

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் தி.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் அவசரம் அவசரமாக அள்ளித்தெளித்த நீர்க்கோலம் போல மழைநீர் வடிகால்வாய் பணிகளை கலவர மயமாக செய்து வருகிறார்கள். இந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் 90 சதவீதத்தினர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எந்திரம் போல பணியாற்றுகிறார்களே தவிர நிலைமையை உணர்ந்து பணியாற்றுவது கிடையாது. சில தெருக்களில் நுழையவே முடியாத அளவுக்கு சாலையின் இருபக்கமும் பள்ளங்களை வெட்டி விடுகிறார்கள்.

இந்த பணிகளுக்கான ஒப்பந்த கால அவகாசம் அடுத்த வருடம் வரை தான் இருப்பதாகவும், இதனால் கூடுதல் லஞ்சம் கேட்டு ஒப்பந்ததாரர்கள் வற்புறுத்தப்படுவதாகவும், இதனால் வெளிமாநில தொழிலாளர்களை அதிகளவில் பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிப்பதற்காக மக்களுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை கைகட்டி மாநகராட்சி நிர்வாகமும் வேடிக்கை பார்க்கிறது. வேலூர், கோவை மாநகராட்சிகளிலும் இதேநிலை தான் இருக்கிறது.

குறைபாடுள்ள இந்த பணிகளால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருவதை கேட்பதற்கு நாதியில்லை. தீர்வுக்கு யாரும் தயாராக இல்லை. ஊழலும், லஞ்சமும் இல்லாமல் இந்த நிர்வாகத்தில் எந்த பணியையும் முழுமையாக, நிறைவாக செயல்படுத்த முடியாது என்பதற்கு மழைநீர் வடிகால்வாய் பணி ஒன்றே சாட்சி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்