< Back
மாநில செய்திகள்
பனமலைப்பேட்டை மலைக்கோவிலில் குவிந்த பொதுமக்கள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

பனமலைப்பேட்டை மலைக்கோவிலில் குவிந்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
17 Jan 2023 6:45 PM GMT

காணும் பொங்கலை முன்னிட்டு பனமலைப்பேட்டை மலைக்கோவிலில் பொதுமக்கள் குவிந்தனர்.


தமிழர்களின் முக்கிய திருவிழாவாக கருதப்படும் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழா முடிந்து நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கிராமங்களில் சிறுவர், சிறுமிகள், மகளிர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மேலும் காணும் பொங்கல் விழா பெண்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். பொங்கல் தினத்தன்று பானையில் கட்டி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கொத்துகளை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகளின் கையில் கொடுத்து ஆசிபெற்று அதனை கல்லில் இழைத்து தங்களது பாதம், முகத்தில் பூசிக்கொள்வார்கள். இப்படிப்பட்ட முக்கிய விழாவான காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த காணும் பொங்கலை விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்கு இடங்களான சினிமா தியேட்டர், பூங்கா, கடற்கரை, மலைக்கோவில், ஆற்றுப்பகுதி போன்ற இடங்களுக்குச்சென்று மகிழ்ந்தனர்.

மலைக்கோவிலில் குவிந்த மக்கள்

அந்த வகையில் விழுப்புரம் அருகே பனமலைப்பேட்டையில் உள்ள பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த மலைக்கோவிலான தாளகிரீஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பனமலைப்பேட்டை, அன்னியூர், அனந்தபுரம், சூரப்பட்டு, சங்கீதமங்கலம், கஞ்சனூர், கெடார், பாலப்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மலைக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததோடு மலையின் அழகையும், இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் வயல்வெளிகளையும் கண்டு ரசித்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள், மலைக்கோவிலை சுற்றி விளையாடி மகிழ்ந்தனர்.

அணைக்கட்டில்...

இதேபோல் விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். விழுப்புரம், காணை, கருங்காலிப்பட்டு, தெளி, கோனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, மாம்பழப்பட்டு, கல்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் வரும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் ஆற்றங்கரைகளில் கபடி, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டு காணும் பொங்கலை கொண்டாடினர். பொதுமக்களின் வருகையை கருத்தில் கொண்டு பனமலைப்பேட்டை மலைக்கோவில், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதிகளில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்