< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

தினத்தந்தி
|
17 April 2024 4:53 AM GMT

விவேகானந்தர் மண்டபத்தை பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்காக பொதிகை, குகன் விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதற்கு வசதியாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தேர்தல் நடைபெறும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்