கன்னியாகுமரி
பத்மநாபபுரம் அரண்மனையை குடும்பத்தினருடன் பார்வையிட்ட அமெரிக்க தூதர்
|பத்மநாபபுரம் அரண்மனையை குடும்பத்தினருடன் பார்வையிட்ட அமெரிக்க தூதர்
தக்கலை,
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வருபவர் எரிக் கார் செட்டி. இவர் மனைவி, மகளுடன் நேற்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து அந்த மாநில போலீஸ் பாதுகாப்புடன் கார் மூலம் குமரி மாவட்டம் வந்தார். முதலில் கன்னியாகுமரிக்கு சென்று சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 10 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்தனர். அங்கு அவர்களை அரண்மனை அதிகாரி அஜித்குமார் வரவேற்றார். பின்னர் அமெரிக்க தூதர் மற்றும் குடும்பத்தினர் அரண்மனையின் ஒவ்வொரு அறைகளாக சென்று பார்த்தனர். அவர்களுக்கு அரண்மனை வழிகாட்டி மூலம் அரண்மனையின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. அப்போது அரண்மனையில் உள்ள செண்பகப்பூவை பறித்த அமெரிக்க தூதரின் மகள், அதனை தன்னுடைய தந்தையிடம் காண்பித்தார். அவரும் அந்த பூவை வாங்கி ரசித்தார்.
அமெரிக்க தூதரின் வருகையையொட்டி அரண்மனையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமெரிக்க தூதர் அரண்மனையில் இருந்து புறப்பட்டு செல்லும் வரை சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.