< Back
மாநில செய்திகள்
வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்; தொற்று நோய் பரவும் அபாயம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்; தொற்று நோய் பரவும் அபாயம்

தினத்தந்தி
|
17 Feb 2023 8:01 PM GMT

வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்; தொற்று நோய் பரவும் அபாயம்

தஞ்சை -நாகை சாலையில் ஓடும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுத்திகரிப்பு நிலையம்

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

சாலையில் ஓடும் கழிவு நீர்

இந்த நிலையில் தஞ்சை -நாகை சாலை ராஜீவ் நகர் அருகே பாதாள சாக்கடை ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது. இந்த சாலையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும். கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். வாகனங்களும் கடும் சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றன.

தொடர்ந்து இது போல் சாலைகளில் கழிவு நீர் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக போர்கால அடிப்படையில் இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்