< Back
மாநில செய்திகள்
கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அவசியமா?
தேனி
மாநில செய்திகள்

கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அவசியமா?

தினத்தந்தி
|
22 Nov 2022 7:00 PM GMT

ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்று கருத்து தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டுவந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களைப் பெற்று நடைமுறையில் இருக்கிறது.

ஆடை கட்டுப்பாடு

பல வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் சீருடை முறை பின்பற்றப்படுகிறது. தங்கள் நிறுவனப் பணியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோல் டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கறுப்பு நிறத்திலும் கோட்டு அணிவதும் அதற்காகத்தான்.

சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. சிலநேரங்களில் இதனால் சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்

2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக் கட்டுப்பாட்டில் சில உத்தரவுகளை பேராசிரியர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

2009-ம் ஆண்டு பள்ளி ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டோ, மெல்லிய உடைகளோ அணிந்து வர தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

2018-ல் ஒடிசா மாநில பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை அணிந்துவரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டில் கேரளாவில் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியைகள் சேலை அணிந்துவர கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர், கேரள கல்வித்துறை அமைச்சகம் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேல் அங்கி அணிய வேண்டும்

தற்போது தமிழக உயர்கல்வித் துறைக்கு, வந்த ஒரு புகார் மனு அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரிக்கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர்கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கை உத்தரவா? அல்லது யோசனையா? புகார் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருக்கிறதா? என்பது எல்லாம் புரியாத புதிராக இருக்கின்றன. அதை உயர்கல்வித்துறை தெளிவுப்படுத்த வேண்டும். இருப்பினும், உயர்கல்வித்துறை கூறி இருப்பது போல, கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு என்பது அவசியமானதா?, அதை நடைமுறைப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வரவேற்கத்தக்கது

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர் ஆகியோர் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

மலர் (கல்லூரி பேராசிரியை, தேனி) :- கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. நான் பணியாற்றும் கல்லூரியில் பல ஆண்டுகளாக 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணியும் பழக்கம் உள்ளது. இயல்பாகவே பெண்களுக்கு தாங்கள் அணிந்துள்ள ஆடை மீது கவனம் இருக்கும். இது பாடம் நடத்தும் போது சிலருக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தலாம். மேல் அங்கி அணிந்து இருப்பதால் ஆடை மீது கவனம் செலுத்துவதை தவிர்த்து, பாடத்தின் மீது முழு கவனம் செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு சொல்லிக் கொடுக்க முடிகிறது. நம்மை பார்த்து தான் மாணவ, மாணவிகள் கல்வி கற்கிறார்கள். அவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து அதை சரியாக பின்பற்ற வழிகாட்டும் பேராசிரியர்களும் அதை பின்பற்றுவதில் தவறில்லை. அது சிறந்த முன்னுதாரணமாகவும் இருக்கும். மாணவர்களிடம் சுய ஒழுக்கம் குறைந்து வருவதே ஆடை கட்டுப்பாடு அளவுக்கு சென்றுள்ளதாக பார்க்க முடிகிறது.

குற்றங்கள் அதிகரிப்பு

தமிழ்செல்வி (பேராசிரியை, தேனி) :- கடந்த 10 ஆண்டுகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. செல்போன், சமூக வலைத்தளங்களின் தாக்கம் காரணமாக சமுகத்தின் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவை பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களை பாதிக்க வைக்கின்றன. இதனால் ஆடை கட்டுப்பாடு குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியிலும் இந்த ஆடை கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும். இதையெல்லாம் தாண்டி, வீடுகளிலும், ஆரம்ப பள்ளி அளவிலும் சுய ஒழுக்கம் குறித்து மாணவர்களுக்கு அதிகம் கற்பிக்க வேண்டிய தேவை உள்ளது.

சுய ஒழுக்கம் மேம்பாடு

தமிழ்செல்வன் (பேராசிரியர், வீரபாண்டி) :- ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அளவுக்கு மாணவர்கள் மத்தியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், சில மாணவர்கள் இதை கடைபிடிப்பது இல்லை. அவர்களுக்கு தொடர் அறிவுரை வழங்க வேண்டியது உள்ளது. தற்போது பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து இருப்பதன் மூலம் மாணவர்களிடம் தங்களுக்கான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். பள்ளி அளவிலும் மாணவர்களிடம் சுய ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டிய சிறப்பு வகுப்புகள், பாடப்பிரிவுகளை சேர்க்க வேண்டும்.

தங்கபாண்டியன் (சமூக ஆர்வலர், தேனி) :- டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கறுப்பு நிறத்திலும் கோட்டு அணிவதும் போல் பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அணிவது வரவேற்கத்தக்கது. முன்பெல்லாம் பள்ளிகளில் ஒழுக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஆனால், இன்றைக்கு புத்தகப் புழுக்களாகவே மாணவப் பருவம் மாற்றப்படுகிறது. பாடப்புத்தகம் தாண்டிய அறிவை அவர்களுக்கு புகட்டாததன் விளைவு, ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கும் நிலைமை உருவாகி உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஒழுக்கம் குறைந்துள்ளது. கட்டுப்பாடற்ற சுதந்திரம் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதுவே வகுப்பறைகளையும் பாதுகாப்பற்ற சூழலுக்கு கொண்டு வந்துள்ளது. சேலை அணிந்து இருந்தால் கூட கவனச்சிதறல் ஏற்படுகிறது என்றால் ஆரம்ப கல்வியில் இருந்தே சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த ஆடை கட்டுப்பாடு அவசியம் தான். அதை வரவேற்கிறேன். இதை பள்ளி அளவிலும் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்