< Back
மாநில செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் கவிழ்ந்தது: தாய்-மகள் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் கவிழ்ந்தது: தாய்-மகள் படுகாயம்

தினத்தந்தி
|
2 March 2023 6:37 PM GMT

நொய்யல் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் கவிழ்ந்ததில் தாய், மகள் படுகாயம் அடைந்தனர்.

கிணற்றுக்குள் கவிழ்ந்த கார்

கோவை நேருநகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 48). இவரது மகள் திவ்யதர்ஷினி (28). இவர்கள் 2 பேரும் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் கோவையில் இருந்து ஈரோடு சென்றனர். அங்கு வேலையை முடித்து விட்டு ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

திவ்யதர்ஷினி காரை ஓட்டி வந்தார். அந்த கார் கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை அருகே இடதுபுறம் உள்ள பெட்ரோல் நிலையம் பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் இடதுபுறம் தென்னந்தோப்பிற்குள் உள்ள 30 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்த விவசாய கிணற்றுக்குள் தலைகுப்புற விழுந்தது.

தாய்-மகள் காயம்

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் கிணற்று தண்ணீருக்குள் மூழ்கிய காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய், மகளை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். அப்போது தாயும், மகளும் தண்ணீர் அதிகம் குடித்ததால் மயக்கம் அடைந்தனர்.

மேலும் அவர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்களை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். உடனடியாக கிரைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் விழுந்த காரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அந்த கார் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டது.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கார் கிணற்றுகள் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்