< Back
மாநில செய்திகள்
வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலால் ஒருவர் உயிரிழப்பு..!
மாநில செய்திகள்

வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலால் ஒருவர் உயிரிழப்பு..!

தினத்தந்தி
|
16 May 2023 9:44 AM GMT

வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேலூர்,

தமிழகத்தில் அதிக வெயில் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. கடந்த மார்ச் மாத தொடக்கம் முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கி தினசரி 100 டிகிரியை கடந்து கொளுத்தி வருகிறது. வெயில் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி என தவித்து வருகின்றனர்.

வழக்கத்தை காட்டிலும் வெயில் அதிகமாக இருப்பததால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறுகளை வாங்கி மக்கள் குடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் 48 வயதுமிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொய்கை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிய போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முருகன் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து மற்றும் சிகிச்சை எடுத்து வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகள்