< Back
மாநில செய்திகள்
திருமணம் முடிந்த மறுநாள் நகை, பணத்துடன் புதுப்பெண் ஓட்டம்
மாநில செய்திகள்

திருமணம் முடிந்த மறுநாள் நகை, பணத்துடன் புதுப்பெண் ஓட்டம்

தினத்தந்தி
|
26 May 2024 11:29 PM GMT

நகை, பணத்துடன் புதுப்பெண் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

மதுரை,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் டிரைவராக வேலை செய்கிறார். இவருக்கு திருமணமாகி, குழந்தை இல்லாததால் முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண் புரோக்கர் மூலம் 2-வது திருமணத்துக்கு பெண் பார்த்தனர். அதன்படி அவருக்கு 2-வது திருமணம் நடந்துள்ளது.

மறுநாள் கணவன்-மனைவி இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது டிரைவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதனால் அவர் மனைவியிடம் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்று போனில் பேசினார். திரும்பி வந்து பார்த்தபோது தனது 2-வது மனைவியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2-வது மனைவிக்கு டிரைவர் தனது சொந்த செலவில் தங்கநகை வாங்கி அணிவித்து இருந்தார். ரொக்கப்பணத்தையும் அவரிடம் கொடுத்து இருந்தார். அந்த நகை, பணத்துடன் புதுப்பெண் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

இதனால் தனக்கு 2-வது திருமணம் செய்து வைத்த பெண் புரோக்கரை செல்போன் மூலம் டிரைவர் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது, புரோக்கரும், அந்த பெண்ணும் தன்னை திருமணம் செய்வது போல நடித்து ஏமாற்றிவிட்டார்களோ என விரக்தி அடைந்த அவர், போலீசில் இதுவரை புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்