< Back
மாநில செய்திகள்
சொத்து தகராறில் மூதாட்டி வெட்டிக்கொலை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சொத்து தகராறில் மூதாட்டி வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
4 Nov 2022 7:43 PM GMT

சொத்து தகராறில் மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

குன்னம்:

டிரைவர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி ஜானகி(வயது 65). இவர்களுக்கு செல்வி(50), சகுந்தலா(48), புஷ்பவல்லி(35) என 3 மகள்களும், வெங்கடேசன்(40) என்ற மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இதில் சகுந்தலா மேலஉசேன் நகரம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மணிமாறன்(26) என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

சொத்துகளை பிரித்து கொடுத்தார்

இந்நிலையில் ரெங்கநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து ஜானகி சொத்துக்களை விற்று, 5 பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை தனக்கு வைத்துக்கொண்டு, மற்ற 4 பங்கை தனது மகள்கள் மற்றும் மகனுக்கு கொடுத்துள்ளார். இதில் மற்றவர்களுக்கு அதிகமாக பங்கு கொடுத்ததாகவும், தனது தாய்க்கு ஓரவஞ்சனை செய்ததாகவும் மணிமாறன் கூறி, ஜானகியின் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

அரிவாளால் வெட்டினார்

இதைத்தொடர்ந்து நேற்று காலையும் பணம் கேட்டு ஜானகியிடம், மணிமாறன் தகராறு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற அவர், மாலையில் தனது நண்பர்களான அல்லி நகரத்தைச் சேர்ந்த டிரைவர் சம்பத்(35), ரமேஷ்(30), கலைவாணன்(30) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜானகி வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மணிமாறன் சொத்தில் பங்கு கேட்டு ஜானகியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் சொத்தில் பங்கு தருவதற்கு ஜானகி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன் அரிவாளால் ஜானகியின் தலையில் வெட்டியுள்ளார். இதில் ஜானகி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து மணிமாறன் உள்ளிட்டோர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கைது

இது பற்றி தகவல் அறிந்து பதறியடித்துக் கொண்டு அங்கு வந்த உறவினர்கள், ஜானகியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மணிமாறன், அவரது நண்பர் சம்பத் ஆகியோரை கைது செய்தனர் மேலும் தலைமறைவான ரமேஷ், கலைவாணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் பாட்டியை பேரனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்