< Back
மாநில செய்திகள்
இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருச்சி
மாநில செய்திகள்

இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தினத்தந்தி
|
24 April 2023 8:12 PM GMT

இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர்:

அடக்கம் செய்ய எதிர்ப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி கீழ குமரேசபுரம் பகுதியில் வசிக்கும் சில சமுதாயத்தினர், இறந்தவர்களின் உடல்களை எழில் நகர் பகுதியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் அடக்கம் செய்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் வீடுகள் அமைந்துள்ளதால், அங்கு வசிக்கும் சிலர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கீழ குமரேசபுரம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியரான நல்லுச்சாமி(வயசு 75) நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.

இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய நேற்று அப்பகுதி மக்கள் தயாராகினர். இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி குடியிருப்பு நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி(45) என்பவர் ஆட்சேபனை தெரிவித்ததுடன், மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தீக்குளிக்க முயற்சி

இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் உடனடியாக அங்கு வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது பற்றி தாசில்தார் ஜெயபிரகாசம், கோட்டாட்சியர் தவச்செல்வத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். அப்போது நல்லுசாமியின் உடலை வழக்கமான இடத்தில் அடக்கம் செய்வது என்றும், நாளை(புதன்கிழமை) திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்