< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில்   இணைக்க வாய்ப்பே இல்லை
சேலம்
மாநில செய்திகள்

'ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை'

தினத்தந்தி
|
8 Nov 2022 7:42 PM GMT

‘ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை’ என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஓமலூர்

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் செம்மலை, சந்திரசேகரன் எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.க்கள் மணி, சுந்தர்ராஜன், சித்ரா, நல்லதம்பி, ஜெய்சங்கரன், பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பூத்துக்கு நிர்வாகிகள் 25 பேர் வீதம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 7 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரின் செயல்பாடு ஆட்சி அமைக்க ஏதுவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம். ஒவ்வொரு உறுப்பினரின் செயல்பாடும் கட்சி வளர்ச்சிக்கான பணியாக இருக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை இருந்தால் அது நல்ல பொருள் என்று அர்த்தம். அது போல் அ.தி.மு.க. என்றால் ஐ.எஸ்.ஐ. முத்திரை மாதிரி இருக்க வேண்டும்.

வாய்ப்பு கிடையாது

பொதுக்குழுவில் 2 ஆயிரத்து 500 பேர் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினோம். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார். சட்ட விதிகளின்படி 2 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது. இதனால் அவர் இணைவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும்.

அ.தி.மு.க. குறித்து பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. தி.மு.க. பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள் எப்போதும் தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பார்கள். ஆனால் அவர்களே இப்போது தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

10 தொகுதிகள்

சேலம் மாவட்டத்தில் நாம் கொண்டு வந்த திட்டத்தை தவிர வேறு திட்டம் ஏதாவது தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்களா?. 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மருத்துவமனை, தார் சாலைகள், மேம்பாலம், ஏழை மக்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் போன்றவை சேலம் மாவட்டத்தில் காலத்தால் அழியாதவை. அதனால் தான் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாம் கைப்பற்றினோம். தி.மு.க. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தில் ஆளுகின்ற கட்சி அ.தி.மு.க. தான்.

புதிதாக குடியேறியவர்களை கண்டுபிடித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க நிர்வாகிகள் அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்