< Back
மாநில செய்திகள்
நிபா வைரஸ் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
மாநில செய்திகள்

நிபா வைரஸ் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

தினத்தந்தி
|
23 July 2024 5:46 AM GMT

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை,

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் சிறுவனுக்கு இணை நோய்கள் இருந்த நிலையில் திடீரென காய்ச்சல் வந்தது தெரியவந்தது.

மேலும் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட மறுநாளே சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்று கேரளா விரைந்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லை பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழக-கேரளா எல்லையோரத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

கோவை- கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தா வளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், நர்சுகள் உள்ளிட்டோர் முழு கவச உடை அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கேரளாவில் இருந்து கோவை வரும் பஸ், ஆட்டோ, கார் உள்பட அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். அந்த வாகனங்களில் வரும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அதன்பிறகே அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுபோல் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களின் உள்ளேயும், டயர்களிலும் சானிடைசர் தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்