< Back
மாநில செய்திகள்
விதிமீறல் கட்டிடங்களுக்கு ஒருபோதும் கருணை காட்டக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை
மாநில செய்திகள்

'விதிமீறல் கட்டிடங்களுக்கு ஒருபோதும் கருணை காட்டக்கூடாது' - மதுரை ஐகோர்ட்டு கிளை

தினத்தந்தி
|
31 Jan 2024 4:27 PM GMT

விதிமீறல் கட்டிட பிரச்சினையை கடுமையான பாதிப்பாக கருத வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.

சென்னை,

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 2011-ல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 30.1.1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்களின் கட்டிடங்கள் கட்டக்கூடாது. ஆனால் இந்த விதியை மீறி 9 மீட்டருக்கு மேல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வழக்கறிஞர்கள் ஆணையர்கள் ஆய்வு செய்து செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வழக்கறிஞர்கள் ஆணையர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், மொத்தம் 547 கட்டிடங்களை ஆய்வு செய்ததில், 525 கட்டிடங்கள் 9 மீட்டருக்கும் மேல் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த மனு 2011-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு எத்தனை முறை உத்தரவிட்டும் மாநகராட்சி நிர்வாகமோ, மாநகராட்சி ஆணையர்களோ விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வழக்கறிஞர்கள் ஆணையர்கள் அறிக்கை அடிப்படையில் 13 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? விதிமீறல் கட்டிட பிரச்சினையை கடுமையான பாதிப்பாக கருத வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் மீது ஒருபோதும் கருணை காட்டக் கூடாது.

எனவே, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்களில் எத்தனை கட்டிடங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது? மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டிடப்பட்டுள்ள விதிமீறல் கட்டிடங்கள், அந்த கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை மதுரை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்ரவரி 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்