< Back
மாநில செய்திகள்
நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பொறியியல் வல்லுனர் குழுவினர் நேரில் ஆய்வு
மாநில செய்திகள்

நெல்லை வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பொறியியல் வல்லுனர் குழுவினர் நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
23 May 2023 8:58 AM GMT

பொறியியல் வல்லுனர் குழு அதிகாரி பாண்டுரங்கன் தலைமையிலான அதிகாரிகள் இன்று நெல்லை வ.உ.சி. மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லை,

நெல்லையில் கடந்த சில நாட்களாக தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்த நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் நீடித்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

மேலும் சூறைக்காற்றில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை பெயர்ந்து தூக்கி வீசப்பட்டு சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய கேலரி அரங்கம், விளையாட்டு வீரர்கள் அறைகள் போன்றவை புதுப்பித்து கட்டப்பட்டு திறக்கப்பட்டது. கேலரி மேற்கூரை சரிந்து விழுந்தபோது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று, சேதம் அடைந்த மைதான மேற்கூரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''காற்றுடன், மழையும் பெய்ததால் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. எனவே இதுபோன்று கட்டப்பட்டு உள்ள மற்ற கட்டுமானங்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்வோம். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து பொறியியல் வல்லுனர் குழு அதிகாரி பாண்டுரங்கன் தலைமையிலான அதிகாரிகள் இன்று நெல்லை வ.உ.சி. மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். அங்கு நேற்றைய தினம் இடிந்து விழுந்த கேலரியின் மேற்கூரை தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஐ.ஐ.டி.யில் இருந்து வல்லுனர் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்