< Back
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
8 Nov 2022 4:23 PM GMT

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) தியாகி நா.அண்ணாமலை மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழா, ரோசாவின் ராசா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களை போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு இந்திய விடுதலை போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப்புறா-நேரு என்ற தலைப்புகளிலும் நடைபெறும்.

இந்த தலைப்புகளில் இருந்து போட்டி நாளன்று சுழற்சி முறையில் தலைப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கல்லூரி இணை இயக்குநர் மூலமாக அனைத்து கல்லூரிகளுக்கும், முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்