
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில், இன்று 7 மையங்களில் நீட் தேர்வு 5,143 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை எழுத 5,143 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை எழுத 5,143 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.
நீட் தேர்வு
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2022-2023-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்வுக்காக நாமக்கல் மாவட்டத்தில் பாவை என்ஜினீயரிங் கல்லூரி, தி ஸ்பெக்ட்ரம் அகாடமி, பல்லக்காபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி, நாமக்கல் டிரினிடி இன்டர்நேஷனல் பள்ளி, கே.எஸ்.ஆர்.அக்ஷரா அகாடமி, தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி, நேஷனல் பப்ளிக் பள்ளி என 7 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 5,143 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
முககவசம்
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள மாணவ, மாணவிகளுக்கு நுழைவு சீட்டு ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் எப்போது தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாணவர்களும் முககவசம், கிருமிநாசினி திரவம், போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வை 6 மையங்களில் 3,853 பேர் எழுதினர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 1,290 அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.