< Back
மாநில செய்திகள்
வர்த்தக தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம்
மாநில செய்திகள்

வர்த்தக தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம்

தினத்தந்தி
|
29 April 2023 8:04 PM GMT

சென்னையில் வர்த்தக தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தேசிய செயற்குழு கூட்டம்

சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ.) தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், 2030-2031-ம் ஆண்டுக்குள் ஒரு 'டிரில்லியன் டாலர்' பொருளாதாரமாக தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவது குறித்த 'எப்.ஐ.சி.சி.ஐ.'-யின் 'டெலாய்ட்' ஆய்வு அறிவு கட்டுரையை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உயர்கல்வியிலும், திறன் ஆற்றலிலும் தமிழகம் சிறப்பாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் தமிழகத்தின் பங்களிப்பு 5.7 சதவீதம். ஆனால் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகத்தின் பங்களிப்பு இதைவிட அதிகம் என்பது மிகச்சிறப்பாகும்.

அகில இந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 3.85 கோடி என்றால் அதில் தமிழகத்தின் பங்களிப்பு 35.20 லட்சமாகும். அதாவது 9 சதவீதமாகும். உதாரணமாக எம்.பில். கல்வி சேர்க்கையில் அகில இந்திய எண்ணிக்கை 23,934 என்றால், அதில் தமிழகத்தின் பங்களிப்பு 9,779 ஆக அதாவது 41 சதவீதமாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

மேலும் உற்பத்தி, ஏற்றுமதி, மீன்பிடி, சுற்றுலா, துறைமுகம், மரபு மற்றும் கடலோர சுற்றுலா போன்றவை இங்குள்ள சிறப்பு அம்சங்கள் ஆகும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரக்கூடிய முக்கிய அம்சங்களாக மின்சார வாகனம், வேளாண் உணவு, தொழில்நுட்ப ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், 'செமி-கன்டக்டர்' ஆகியவற்றின் உற்பத்தியை கூறலாம். இவற்றின் மதிப்பு கூட்டப்படுவதை அதிக அளவில் மேம்படுத்தலாம்.

அதன்படி, தமிழ்நாடு சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடத்தக்க ஆற்றலை கொண்ட மாநிலமாக திகழ்கிறது. குறிப்பிடப்பட்ட கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் தலையிட்டு சீர்செய்யும் பட்சத்தில் ஒரு 'டிரில்லியன் டாலர்' பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி மாநிலம் முன்னேற முடியும்.

இந்த தலையீடுகள், நிலையான தொடர் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் செயல்பாட்டை ஊக்கப்படுத்துவது ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

இலக்கை அடையலாம்

இவை அனைத்தும் முக்கிய செயல்பாட்டு குறியீட்டுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அவைதான் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்களை பிரதிபலிக்கும். முக்கிய செயல்பாட்டு குறியீடுகள் அனைத்து முதல்-அமைச்சர் மட்டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும். அந்த குறியீடுகள் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டவில்லை என்றால் உடனடியாக அதில் கவனம் செலுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் சார்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சரியான நேரத்தில் செயல்பட்டு, தொடர்ந்து கண்காணித்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் தமிழகம் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்