< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை

தினத்தந்தி
|
13 Feb 2023 9:16 PM GMT

திண்டுக்கல் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கூலித்தொழிலாளி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சீவல்சரகு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி (30) என்ற மனைவியும், மதுமிதா (12), சாருலதா (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களாக திண்டுக்கல் எருமநாயக்கன்பட்டியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பையா வேலை தொடர்பாக ஆந்திராவுக்கு சென்றார். பின்னர் அங்கேயே தங்கி அவர் வேலை செய்து வந்தார். இதற்கிடையே ேநற்று முன்தினம் கருப்பையா ஆந்திராவில் இருந்து எருமநாயக்கன்பட்டிக்கு மனைவி, மகள்களை பார்ப்பதற்காக வந்தார்.

கொடூர கொலை

இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் கருப்பையா, அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றுக்கு செல்லும் பாதையில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது கருப்பையாவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கருப்பையாவை சரமாரியாக வெட்டினர். மேலும் ஆத்திரம் தீராத அவர்கள், கருப்பையாவின் தலையில் கல்லைப்போட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார். பின்னர் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே அந்த வழியாக சென்றவர்கள், கருப்பையா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்தனர். உடனே இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் கருப்பையாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லைப்போட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்