< Back
மாநில செய்திகள்
திருப்பூர்
மாநில செய்திகள்

தேடப்பட்டு வந்த 2 பேர் திருப்பூர் போலீசில் சரண்

தினத்தந்தி
|
6 Sep 2023 2:20 PM GMT

4 பேரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் திருப்பூர் போலீசில் சரண் அடைந்தனர்.

பல்லடம்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் திருப்பூர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

4 பேர் படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி கள்ளகிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் மோகன்ராஜ் (வயது 49). சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு வரும் வழியில் அமர்ந்து மதுக்குடித்துக்கொண்டிருந்த நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் வெங்கடேஷ், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் மகன் செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தாலபுரம் பகுதியை சேர்ந்த வனராஜ் மகன் விஷால் என்கிற சோனை முத்தையா(20) ஆகிய 3 பேரையும் கண்டித்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மோகன்ராஜை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் 3 பேரும் சேர்ந்து வெட்டிக்கொன்றனர். இதை தடுக்க வந்த மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமாரையும் துண்டு துண்டாக வெட்டி கொன்று விட்டு தப்பிச்சென்றனர். இந்த கொலை தமிழ்நாட்டை உலுக்கியது.

2 பேர் போலீசில் சரண்

இந்த கொைல பற்றிய தகவல் கிடைத்ததும் கோவை மண்டல ஐ.ஜி. பவானிஈஸ்வரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க ஐ.ஜி மற்றும் டி.ஐ.ஜி.சரவணசுந்தர் ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நெல்லை, திருச்சி, தேனி ஆகிய பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் திருச்சியை சேர்ந்த செல்லமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தேடிய வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார், விஷால் என்கிற சோனை முத்தையா ஆகிய 2 பேரும் நேற்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து பலத்த பாதுகாப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்