ராமநாதபுரம்
வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் மோசடி
|வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் உடையநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவர் அபிராமத்தில் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் முத்ரா கடன் திட்டத்தில் கடன் தருவதாகவும் தனிநபர் கடன் பெற அழைக்கவும் என செல்போன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய பெண்ணிடம் தனக்கு ரூ.1 லட்சம் கடன் வேண்டும் என்று கூறினார். பின்னர் அந்த பெண் கூறியபடி கண்ணன் 20 தவணைகளில் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 100 அனுப்பினார். ஆனால் அந்த பெண் கடன் தராமல் மீண்டும் பணம் கேட்டுள்ளார். இதனால் கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவர் இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.